கொழும்பில் நாளாந்தம் 450 தொன்களுக்கு மேல் குப்பைகள் அதிகரிப்பு – அதிகளவிலான உணவுப்பொருட்களும் தூக்கி எறியப்படுவதாக மாநகர சபை தெரிவிப்பு

பண்டிகை காலத்தில் கொழும்பு நகரப் பகுதியில் குப்பைகள் அகற்றப்படுதல் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
நாளாந்தம் 450 தொன்களாக காணப்பட்ட குப்பைகள் இம்மாத இறுதிக்குள் 500 தொன்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“பண்டிகைக் காலம் என்பதால், நமது சராசரி குப்பைகள் ஓரளவுக்கு அதிகரித்துள்ளது. பொதுவாக, நகரில் தினசரி குப்பை 420 முதல் 450 தொன் வரை காணப்படுகிறது.
ஆனால், டிசம்பர் 31ஆம் திகதிக்குள், கொழும்பிற்கு வரும் அதிக எண்ணிக்கையிலான மக்களால், இது சுமார் 500 தொன்களாக அதிகரிக்கலாம் என நாங்கள் கணிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிகளவிலான உணவுப்பொருட்கள் தூக்கி எறியப்படுவதால், அழுகும் குப்பைகளின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் கலாநிதி அஜித் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்



