News

சீகிரியாவை பார்வையிட நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை!

வருட இறுதியில் சுற்றுலா தளங்களைப் பார்வையிடுவதற்காக வருகைதரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 22ஆம் திகதி முதல் நாளாந்தம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக 10 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நிலப்பரப்பு, உயிர் பல்வகைமை மற்றும் மத, கலாசார விழுமியங்களைக் கொண்ட ஒரு நாடாகும்.

பல நாடுகளில் குளிர் காலநிலை நிலவுகின்ற நிலையில், பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளமையால் இந்த நாட்டில் சிறந்த வானிலை அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது.

இதேவேளை, நாளாந்தம் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சீகிரியாவை பார்வையிட வருவதாக மத்திய கலாசார நிதியத்தின் சீகிரியா திட்ட முகாமையாளர் துசித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வருட இறுதி விடுமுறைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன் சிலரது செயற்பாடுகளினால் சில சுற்றுலாத் தலங்கள் அழிவடைய கூடிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகச் சுற்றுலாத்துறை அமைச்சுக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதன்காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத் தலத்தின் பாதுகாப்பு தொடர்பில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் அக்கறையுடன் செயற்படுமாறு சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி ருவன் ரணசிங்க கோரியுள்ளார்.

இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, குறித்த சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விடுமுறையைக் கழிக்குமாறு சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் கோரியுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button