எரிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்களின் பெயர்ப் பட்டியல் வேண்டும் ; ரவூப் ஹக்கீம் கோரிக்கை

கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்தமைக்கு மன்னிப்புக் கோரும் அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்க முடியாது. ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்தும் ராஜபக்ஷக்களை பாதுகாக்கும் நோக்கத்திலும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மன்னிப்பு விடயத்துக்கு முஸ்லிம் சமூகம் ஒரு போதும் ஏமாறப்போவதில்லை’’ எனத் தெரிவித்த முஸ்லிம் எம்.பிக்கள், கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யும் தீர்மானத்தை எடுத்தவர்கள் யார் என்பதனை வெளிப்படுத்தக்கோரி போர்க்கொடி தூக்கினர்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு மன்னிப்பு கோருவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் நேற்று புதன்கிழமை (24) பாராளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ரவூப் ஹக்கீம் கூறுகையில்,
கொரோனா தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்த விடயம் தொடர்பில் பல தடவைகள் இந்த சபையில் கேள்வி எழுப்பியிருந்தேன். கொரோனா தகனத்துக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம்களின் பெயர்ப் பட்டியலை வழங்குமாறு முன்னாள் சுகாதார அமைச்சரிடம் இந்த சபையில் கேட்டேன். அதற்கு அவர், அவ்வாறான எந்தத் தகவலும் இல்லை என பதிலளித்தார்.
இது உண்மையை மறைப்பதற்கு செய்யும் நடவடிக்கை. அதனால் தகனத்துக்குள்ளான முஸ்லிம்களின் பெயர்ப் பட்டியலை அரசாங்கம் தரவேண்டும்.
எல்லாவற்றையும் செய்துவிட்டு முஸ்லிம் சமூகத்திடம் அரசு மன்னிப்புக்கோரி இதனை முடித்துக்கொள்ள முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும். இதற்கு காரணமானவர்களின் பெயர்ப் பட்டியலை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

