News

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்த குற்றச்செயலில் இருந்து ராஜபக்ஷ்வினரை பாதுகாத்து, அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தவே தற்போது அமைச்சரவை முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறது

எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கொவிட் தொற்றில் மரணித்த முஸ்லிம் பிரஜைகளின் சடலங்களை எரித்த குற்றச்செயலில் இருந்து ராஜபக்ஷ்வினரை பாதுகாத்து அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தவே தற்போது அமைச்சரவை முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோர தீர்மானித்திருக்கிறது என மரிக்கார் எம்.பி. தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொர்ந்து குறிப்பிடுகையில்,

கொவிட் தொற்றில் மரணித்த முஸ்லிம் பிரஜைகளின் சடலங்களை எந்தவித விஞ்ஞான ரீதியிலான தீர்மானமும் இல்லாமல் எரிப்பதற்கு ராஜபக்ஷ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அந்த அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் மிகவும் வேதனை அடைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் அதன் வேதனையை உணர்ந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் வேறுமனே முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோரி இதில் இருந்து தப்பிக்கொள்ள முடியும் என நினைப்பது அரசாங்கத்தின் முட்டாள்தனமான விடயம்.

ராஜபக்ஷ்வினரை இந்த குற்றத்தில் இருந்து பாதுகாத்து அதிகாரிகள் மீது பழி சுமத்தவே அரசாங்கம் திடீரென இவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கிறது.

அப்படியானால் சடலங்களை எரிப்பதற்கு அதிகாரிகள் விஞ்ஞான ரீதியில் அல்லாமல் ஆலாேசனை வழங்கி இருந்தால், அந்த தீர்மானத்தை எடுத்தவர்கள் யார்.

அப்போது அமைச்சரவையில் இருந்தவர்கள் ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தார்கள்?. அதனால் இடம்பெற்ற சம்பவத்துக்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோரி, தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசாங்கம் நினைத்துக்கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட முஸ்லிம் வேதனையை இந்தளவு குறைத்து மதிப்பிட வேண்டாம். அதற்கான நட்டஈடு அரசாங்கத்துக்கு கிடைக்கும்.

அரசாங்கம் உண்மையில் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோருவதாக இருந்தால்.இந்த சம்பத்தின் உண்மையான குற்றவாளிகளை தேடி, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும். இனவாதத்தை அடிப்படையாகக்கொண்டே அன்றைய அரசாங்கம்  கொவிட் தொற்றில் மரணித்தவர்களை எரிப்பதற்கு தீர்மானித்தது. அதில் எந்தவி விஞ்ஞான ரீதியிலான அடிப்படையும் இல்லை. எனவே சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்தில் இந்த தவறுக்கு காரணமான அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button