News

நாங்கள் எந்த தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கு  பின்வாங்கியதில்லை – யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே தேர்தலை பிற்படுத்துமாறு கோருகிறோம் ; நளின் பண்டார (ச.ஜ.ப)

(எம்.ஆர்.எம்.வசீம்)

எந்த தேர்தலுக்கும் முகம்கொடுப்பதற்கு நாங்கள் பின்வாங்கியதில்லை. தேர்தல் பிரசார காலப்பகுதி யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வேட்புமனு கோருமாறு கேட்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவாக நடத்துவதற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருப்பது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எந்தவொரு தேர்தலுக்கும் நாங்கள் அச்சப்பட்டதில்லை. ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்தபோதும் அதன் பிறகு மிக குறுகிய காலத்தில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தலுக்கு நாங்கள் முகம்கொடுத்தோம். ஜனநாயக முறையில் இடம்பெறும் எந்த தேர்தலுக்கு நாங்கள் முகம்கொடுக்க தயாராக இருக்கிறோம்.

அதேபோன்று உள்ளூராட்சி மன்ற தேர்தலையும் விரைவாக நடத்துமாறு நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வந்தோம்.

ஆனால் அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தயாராகும் காலப்பகுதி பொருத்தம் இல்லாம் இருக்கிறது. ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் தேர்தல் பிரசார பணிகளை முறையாக மேற்கொள்ள முடியா நிலை ஏற்டும். அதேநேரம் இந்த காலப்பகுதியில் தேர்தலை நடத்துவதால் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. குறிப்பாக வரவு செலவு திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மறுநாள் தொடக்கம் மார்ச் 21ஆம் திகதிவரை வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெற இருக்கிறது.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இந்த மாதம் வேட்புமனு கோரினால், வரவு செலவு திட்ட விவாதத்தில் பூரணமாக கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. அதேபோன்று குழுநிலை விவாதம் எதிர்க்கட்சியினால் முனெடுக்கக்கூடியதாகும். அதனால் தேர்தலை ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் நடத்தினாலும் தேர்தல் பிரசார காலப்பகுதி வரவு செலவு திட்ட விவாத காலப்பகுதியிலேயே இடம்பெறப்போகிறது.

அதேநேரம் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த காலப்பகுதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார பணிகள் இடம்பெறும்போது அது பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பாக அமைந்துவிடும். அதேநேரம் தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது அனைவருக்கும் பாதிப்பாக அமைந்துவிடும். அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரலை தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பிறகு கோருமாறு நாங்கள் கேட்கிறோம். அவ்வாறு இல்லாமல் எந்த தேர்தலுக்கும் முகம்கொடுப்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button