இருட்டில் சட்டவிரோதத்தில் ஈடுபட்டவர்கள் மீது டோர்ச் வெளிச்சத்தை அடித்தவரை, நகர மத்தியில் வைத்து கத்தியால் குத்திய கும்பல் #இலங்கை

டோர்ச் ஒளியை ஒளிரச் செய்தார் என சந்தேகப்பட்டு, ஒருவர் மீது கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
அனுமதியின்றி மாணிக்கக்கல் தோண்டும் இடத்தை நோக்கியே அந்த நபர், மின்விளக்கை ஒளிரச் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பிலான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பொகவந்தலாவை நகர மையத்தில் கத்தியால் ஒருவரை குத்தி காயப்படுத்திய சந்தேக நபரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச தெரிவித்தார்.
கெசல்கமுவ ஓயா வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடும் போது, அந்த திசையில் டோர்ச் ஒளியை ஒருவர் ஒளிரச் செய்ததாக, கோபமடைந்த சந்தேகநபர், பொகவந்தலாவை நகர மத்தியில் வைத்து, அந்த நபரை, 16ஆம் திகதியன்று கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு, அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதலில் காயமடைந்த நபர் பலத்த காயங்களுடன் டிக்கோயா-கிளங்கன் ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் பொகவந்தலாவை பொலிஸார் தாக்குதல் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ




