பெண் காதிகள் நியமனம், சிறுமிகளின் குறைந்தபட்ச திருமண வயது 18 உள்ளிட்ட முக்கிய மாற்றங்களைக் கொண்ட புதிய முஸ்லிம் தனியார் சட்டமொன்றை நாம் இறுதி செய்து அது சட்டமா அதிபரின் ஒப்புதலையும் பெற்றுவிட்டதாக முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் முக்கிய மாற்றங்களைக் கொண்ட புதிய சட்டமொன்று இறுதி செய்யப்பட்டு, சட்டமா அதிபரின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இதனை வர்த்தமானியில் வெளியிட்டு சட்டமாக்கப்பட உள்ளதாக முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்று காதி நீதிபதி ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட செய்தியை தன் சமூக வலைகளில் பகிர்ந்த போதே இதனை குறிப்பிட்டார்.
ஆணாதிக்க சிவில் சமூக அமைப்புகளின் மற்றும் மத அமைப்புகளின் ஒப்புதலை எதிர்பார்த்திருந்தால், இந்த நியாயமான சட்டம் உருவாகாமலேயே போயிருக்கலாம் என சட்டத்தை முன்னெடுப்பவர்கள் கருதுகின்றனர்.
பெண்களின் உரிமைகளுக்காக போரிடும் ஆர்வலர்களின் முழுமையான எதிர்பார்ப்புகளை இந்த சட்டம் பூர்த்தி செய்யாவிட்டாலும், பல முற்போக்கான மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. அவை:
1. பெண் காதிகள் நியமனம் முதன்முறையாக பெண்கள் காழிகளாக நியமிக்கப்படுவதற்கு வழிவகை.
2. காதிகளுக்கு குறைந்தபட்ச தகுதிகள்: காழிகளுக்கு கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகள் கட்டாயமாக்கப்படுதல்.
3. திருமணத்திற்கு குறைந்தபட்ச வயது 18 சிறுமிகளின் திருமணத்தைத் தடுக்கும் வகையில் 18 வயது கட்டாயமாக்கப்படுதல்.
4. பலதார மணத்திற்கு வழிகாட்டுதல்கள் – பலதார மணத்தை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய விதிமுறைகள்.
5. பராமரிப்பு வழக்குகள் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களுக்கு.. பராமரிப்பு தொடர்பான வழக்குகள் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களின் கீழ் கொண்டுவரப்படுதல்.
இந்த சட்டம் முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கு முக்கிய படியாக கருதப்படுகிறது. “உலகம் மாறிக்கொண்டிருக்கிறது, ஆனால் இந்த விடயத்தில் நாம் பின்தங்கியே இருக்கிறோம். இப்போது இதனை முன்னெடுக்க வேண்டிய நேரம்,” என சட்டத்தை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டவுடன், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவதற்கு புதிய பாதையை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

