உள்ளூராட்சி சபைகளில் ஒன்றிணைந்ததை நினைவு வைத்து நீங்களும் எமது நண்பர் தான் எனக்கூறிய நாமல் – தாஜுதீனைக் கொன்றவர்கள், படுகொலையாளிகள், வெள்ளை வேன் கடத்தல்காரர்களை பாதுகாத்த நீங்கள் எம்மிடம் வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம் என நாமலை எச்சரித்த தொழில் பிரதி அமைச்சர்

வெள்ளை வேன் கடத்தல்காரர்களையும் படுகொலையாளிகளையும் பாதுகாத்தவர்கள் ராஜபக்ஷக்கள். எனவே, எம்மிடம் வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க நாமல் ராஜபக்ஷவை எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) அன்று நடைபெற்ற விவாதத்தில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உரையாற்றிக் கொண்டிருந்த போது, ராதாகிருஷ்ணன் எம்.பி. ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.
அதை பெரிதாக செவிமடுக்காத தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர, நீ்ங்கள் எல்லோரும் கொழும்பு மாநகர சபை ஆட்சியை கைப்பற்ற ஒன்றிணைந்தீர்கள். ஊடக் சந்திப்புகளை நடத்தினீர்கள். எதிர்கால நண்பர்களாகினீர்கள் என்றார்.
இதன்போது குறுக்கிட்ட நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஏன் நீங்களும் எமது நண்பர் தான் என்றார். இதனால் கோபமடைந்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீங்கள் நல்லவர்களா? தாஜுதீனைக் கொன்றவர்கள். படுகொலையாளிகள், வெள்ளை வேன் கடத்தல்காரர்களை பாதுகாத்தவர்கள். உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினர். சரத் பொன்சேகாவை என்ன செய்தீர்கள்? உங்களை எதிர்ப்பவர்களை இருக்க விட்டீர்களா?ஆகவே என்னிடம் வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம் என்றார்

