ரோஹித அபேகுணவர்தனவின் மகளும், அவரது கணவரும் விரைவில் சரணடையாவிட்டால் நீதிமன்றம் ஊடாக சொத்துக்கள் முடக்கப்படும் என பொலிஸார் அறிவிப்பு

சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஜீப் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்ற பொலிஸார், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளும், அவரது கணவரும் விரைவில் சரணடையாவிட்டால், அவர்களது சொத்துக்களை முடக்க நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தங்கியிருக்கலாம் எனக் கூறப்படும் பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் எந்த இடத்திலும் இருப்பது உறுதியாகவில்லை என்றும் பொலிஸார் கூறினர்.
இந்த வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்படும் இருவரும் விரைவில் கைதுசெய்யப்பட உள்ளதாக விசாரணை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
இதனுடன் தொடர்புடைய வழக்கில், கைதுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் தற்போது நீதிமன்றம் மூலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



