முஸ்லிம் காங்கிரஸும் ஆதரவு தெரிவித்து இருந்த வடக்கு கிழக்கு ஹர்த்தால் காலையில் மாத்திரமே இடம்பெறும் என தமிழரசுக் கட்சி அறிவித்தது.

வடக்கு, கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக நாளை கடையடைப்பு திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனவும், அது பலரின் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், “அரசாங்கப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவப் பேச்சாளரும் பொலிஸ் பேச்சாளரும் இருந்தனர்.
நாளை வடக்கு, கிழக்கில் நாம் நடத்தும் ஹர்த்தால் தொடர்பிலேயே இந்த ஊடக சந்திப்பு நடைபெற்றது.
அதில் அவர்கள் விசேடமாகக் கூறிய விடயங்களுக்கு நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அதில் அமைச்சர் கூறுகின்றார், “இது தமிழர்களுக்கு எதிரான விடயம் அல்ல. இப்படியான சம்பவம் எந்தப் பகுதியில் இடம்பெற்றாலும் நடவடிக்கை எடுக்கின்றோம். அதற்கு கடையடைப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை” – எனச் சொல்கின்றார்
ஆனால் வடக்கு, கிழக்கைப் போன்று நாட்டின் எப்பகுதியிலும் மக்கள் மத்தியில் இராணுவப் பிரசன்னம் கிடையாது.
நாங்கள் இந்தக் கடையடைப்பு மூலம் வெளிக்கொணர இருக்கும் முக்கிய விடயம் என்னவெனில் சாதாரண மக்களுடைய வாழ்க்கையில் இடையூறு செய்யும் விதமாகவே இந்த இராணுவ மயமாக்கல் இடம்பெறுகின்றது என்பதனை நாம் தொடர்ச்சியாகக் கடந்த 16 வருடங்கள் சொல்லி வருகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்

