News
VIDEO > மாத்தறை – மொனராகலை பிரதான வீதியில் காட்டுயானை மேல் மோதி கடும் சேதத்துக்குள்ளான டொல்பின்

மாத்தறை – மொனராகலை பிரதான வீதியில் தணமல்வில, கித்துல்கொட பிரதேசத்தில் காட்டு யானை மீது மோதி வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (15) காலை 05.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிட்டம்புவையிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த வேன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது வேனில் பயணித்த 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, விபத்தில் சிக்கிய காட்டு யானை அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் ஓடிச் சென்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் தணமல்வில பொலிஸார் மற்றும் தணமல்வில வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

