நுவரெலியாவில் 4 மில்லியன் முதலீட்டில் சொந்தமாக ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருந்த கெஹெல்பத்தர பத்மே – விசாரணையில் அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளுடனான நெருங்கிய தொடர்புகளும் அம்பலம்.

நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
‘கெஹெல்பத்தர பத்மே’ என்று அழைக்கப்படும் பிரபல குற்றவியல் உலக நபரான மந்தினு பத்மசிறி, இந்த தொழிற்சாலைக்கு 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நுவரெலியாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு இந்த போதைப்பொருள் தொழிற்சாலை இயக்கப்பட்டதாகவும், இதற்காக 2000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனப் பொருட்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
“இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயம். தற்போது நடைபெறும் விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது தொடர்பாக ஆழமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது,” என்று அமைச்சர் விஜேபால கூறினார்.
மேலும், இந்த குற்றவியல் நபர்களுக்கு அரசியல் தொடர்புகள், பொலிஸ் அதிகாரிகளுடனான தொடர்புகள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடனான தொடர்புகள் மூலம் போலி கடவுச்சீட்டுகள் பெறப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த விவரங்களை உறுதிப்படுத்துவதற்காக மேலதிக ஆழமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த தகவல்களை அரச ஊடகமான ஐ.டி.என். தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் வெளியிட்டார்.



