இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இலச்சினை (Emblem) சிதைக்கப்பட்டமை தொடர்பில் CID யில் முறைப்பாடு !

பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் இரண்டு முறை ஹேக்கர்களினால் (Hackers) ஊடுருவப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சைபர் தாக்குதல்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா கணினி அவசர சிகிச்சை பிரிவு (SLCERT) மற்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதிப்படுத்தியுள்ளார்.
அமைச்சின் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இலச்சினை (Emblem) சிதைக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது மிகவும் பாரதூரமான நிலைமை என சுட்டிக்காட்டிய அமைச்சர், அரசாங்க இலச்சினையை சிதைத்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) ஏற்கனவே விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
இணையத்தளத்தின் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தவும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்கவும் உரிய தொழில்நுட்ப பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



