News

தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்களை தேச பற்றார்களாக அறிவிக்க புத்தசாசன
அமைச்சர் இணக்கம்

அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையில் முக்கிய சந்திப்பு..!
——————————————-

தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்கள் தொடர்பான விவகாரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று (06) பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோரை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

முதற்கட்டமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், இவ்விவகாரம் தொடர்பில் விரிவான விளக்கங்களை முன்வைத்தார். இதன்போது, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக இவ்விடயத்தை முன்னெடுத்து நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின்போது, காலனித்துவ ஆட்சிக்கெதிராக போராடிய பல முஸ்லிம் வீரர்கள், ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ‘தேசத் துரோகிகள்’ என முத்திரை குத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களை உரிய வகையில் தேசப் பற்றாளர்களாக அங்கீகரிக்க வேண்டிய அவசியம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பான முழுமையான ஆவணங்கள், வர்த்தமானி அறிவித்தல்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து தகவல்களையும் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களிடம் அவர் கையளித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், குறித்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்கள் தொடர்பான இந்த விவகாரம் குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் இதற்கு முன்னரும் பல தடவைகள் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் விரிவாக கருத்துகளை முன்வைத்து, தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

— ஊடகப் பிரிவு

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button