கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான ஆட்கொணர்வு மனு விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க வருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பலமுறை அழைப்பாணை விடுத்திருந்தது.
இருப்பினும், பாதுகாப்பு காரணங்களைக் கூறி அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வருவதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலையாகாமல் கோட்டாபய ராஜபக்ச இழுத்தடிப்பு செய்வதன் மூலம், இந்த வழக்கின் விசாரணைகளை அவர் திட்டமிட்டு முடக்கி வருவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ் . மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.



