News

அனர்த்தத்தில் சேதமடைந்து கொழும்பு கண்டி ரயில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த பேராதனை யக்கா பாலத்தின் புனரமைப்புப் பணிகள் விரைவில் பூர்த்தியாகிறது – ஏப்ரல் 14 ஆம் திகதிக்கு முன்னர் ரயில் போக்குவரத்து ஆரம்பம்

டித்வா புயலினால் சேதமடைந்துள்ள பேராதனைப் பாலத்தின் ஊடாக ரயில் போக்குவரத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (18) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய இரண்டரை மாதக் காலப்பகுதிக்குள் 1,200 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக முப்படையினர் பாரிய ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். அவர்களின் ஒத்துழைப்பு கிடைத்திருக்காவிட்டால் நாம் தற்போது இந்த இலக்கை எட்டியிருக்க முடியாது.

அத்துடன், டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாலங்கள் மற்றும் வீதிகளில் 99 சதவீதமானவை தற்போது போக்குவரத்தை முன்னெடுக்கக்கூடிய நிலையை எட்டியுள்ளன. இதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்பே பிரதான காரணமாகும்.

பேராதனைப் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடம் மற்றும் பல தரப்பினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்வரும் ஏப்ரல் 14 ஆம் திகதிக்கு முன்னர் அந்தப் பாலத்தின் ஊடாக ரயில் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button