ஈரானின் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனீயின் மறைவுக்கு அட்டாளைச்சேனையில் துக்கக் கொடி ஏற்றம்..

நூருல் ஹுதா உமர்
அயத்துல்லா அலி காமெனி அவர்களின் மறைவையொட்டி அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை பகுதிகளில் இன்று துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன.
உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியமானவராகக் கருதப்பட்ட அயத்துல்லா அலி காமெனி அவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, அவரது இழப்பை நினைவுகூர்ந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களை நினைவுகூரும் வகையில் துக்கக் கொடிகள் கட்டப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதி தவிசாளர் பாறுக் நஜித் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம். றியாஸ் உள்ளிட்ட பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இலங்கையின் உயர்ந்த அரசியல் மாவட்டங்களிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அனுதாபச் செய்தி அல்லது நிலைப்பாடு வெளியாகாத நிலையிலும், உள்ளூர் மட்டத்தில் இவ்வாறு துக்கம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற்றதாகவும், எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








