News

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய மிகவும் கொடூரமான, ஒருதலைப்பட்சமான தாக்குதல் குறித்து கவலையடைகிறேன் – இலங்கை அரசின் மீதும் ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை வெளியிட்டார்

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய மிகவும் கொடூரமான, ஒருதலைப்பட்சமான தாக்குதல் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.



இதன் விளைவாக ஈரானின் உயர் தலைவர் அயதுல்லாஹ் அலி கொமெய்னி மற்றும் உயர்மட்ட அரச பாதுகாப்பு அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.



அதிர்ச்சியூட்டும் வகையில், சர்வதேச சட்டத்தை முற்றாக மீறி, அமெரிக்கா, இஸ்ரேல் அகியவற்றால் தேவையற்ற விதத்திலும், பொறுப்பற்ற விதத்திலும் மேற்கொள்ளப்பட்டதாக விவரிக்கப்படும் இந்த தாக்குதலில் தங்கள் பெருமதிப்பிற்குரிய உயர் தலைவரின் இழப்புக்கு மத்தியில் ஈரான் மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில், அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த கவலையையும், உளப்பூர்வமான அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதன் மூலம் பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைக்க ஈரான் தெளிவாக முயன்று வந்திருக்கிறது.



மேலும், (GoSL),அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது பாதிக்கப்பட்ட(ஈரான்) அரசின் பதிலடி குறித்து இலங்கை அரசாங்கம் (GoSL)நேற்று (01) அதிருப்தி தரும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஈரான் அல்லது அதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாரிய இழப்புகள் பற்றிய எந்தவிதமான குறிப்பையும் தவிர்த்துக்கொண்டுள்ளது. 

ஈரான், இலங்கையுடன் வரலாற்று ரீதியாக நட்புறவைப் பேணி வரும் ஒரு நாடு என்பதை மறந்துவிடக்கூடாது.



இலங்கை அரசாங்கம் கையாண்டிருக்கும் சொல்லாட்சி, ஈரானின் உயர் தலைவரின் மரணத்தைச் சூழ்ந்திருந்த மிலேச்சத்தனத்தை அங்கீகரிப்பதாகவே தோன்றுகிறது. இந்த இழி செயலைக் கண்டிப்பதற்கும், இறையாண்மை கொண்ட ஒரு தேசத்திற்கு எதிரான அவர்களின் “வெற்றிகரமான” இராணுவத் தாக்குதல்களைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் ஆக்கிரமிப்பாளர்களினால் அவர் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவிப்பதற்குப் பதிலாக,அணிசேரா கொள்கை மற்றும் நடுநிலைமையைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொண்டே, இலங்கை அரசாங்கம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய நிலைப்பாட்டிலும், பல சந்தர்ப்பகளில் காசா மீதான செயற்பாட்டிலும் அதன் தொடர்ச்சியான நழுவல் போக்கை வெளிக்காட்டியுள்ளது கவலையளிக்கிறது.



காசா மீதான இஸ்ரேலியப் போர் மற்றும் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் விஷயங்கள் குறித்து பதவியேற்றதிலிருந்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுவரும் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை.



அறிவுபூர்வமாகவும், தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உற்று நோக்கினால், அரசாங்கங்களும்,வெளி விவகார அமைச்சுகளும், இந்த அளவுக்கு மட்டரகமாக இதற்கு முன்னர் நடந்துகொள்ளவில்லை. மிகப்பெரிய ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலின் சுய பாதுகாப்புக்காக என்ற போலியான கூற்றுக்களை இன்னும் தங்கள் தனிப்பட்ட சொந்த விருப்பு,வெறுப்புக்களை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் சில மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடுகளுடன் தற்போதைய இலங்கை ஆட்சியாளர்களிள் நடவடிக்கைகளும் பெரிதும் ஒத்துபப்போவதாகவே தென்படுகிறது.



இலங்கை அரசாங்கத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விதத்தில்,அமெரிக்க -இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பின் அட்டூழியத்தைப் பற்றி அறவே குறிப்பிடாமல், பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டின் மீது பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் சுமையை ஒரு விவேகமான அரசாங்கம் எவ்வாறு சுமத்த முடியும்?

ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சியினர் என்ற அடிப்படையில், அமெரிக்க-இஸ்ரேலிய படையினரின் அத்துமீறிய ஆக்கிரமிப்பையும் ஈரானின் உயர் தலைவரின் வெறுக்கத்தக்க படுகொலையையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.



ஈரானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய நீண்டகால பிராந்திய மோதலின் படுகுழியில் பிராந்தியத்தைத் தள்ளிவிடக் கூடிய ஒரு மோதலைத் தணிப்பதிலும்,தவிர்ப்பதிலும் தான் பாதுகாப்பான பிராந்தியத்தின் நன்மையும் நலனும் தங்கியுள்ளன.



ஈரானுக்கும், பிராந்தியத்திற்கும் இடையிலான தற்போதைய பதற்றநிலை எங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது . அமெரிக்க இராணுவ தளங்களை வைத்துக் கொண்டிருக்கும் வளைகுடா நாடுகள், அமெரிக்க இராணுவ இருப்புக்கு எதிராக ஈரானிய பழிவாங்கலின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய அளவுக்கு நிலைமை உருவாகுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இதுபோன்ற சூழ்நிலை பிராந்தியத்தை குழப்பத்தில் வைத்திருப்பது பெரிதும் வருந்தத்தக்கது.



பரந்த பிராந்திய மோதல் மற்றும் உலகளாவிய உறுதியற்ற தன்மை குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான், அவற்றில் வசிக்கும் மக்கள் மற்றும் பரந்த பிராந்தியத்துடன் நாங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த விரும்புகிறோம். ஆக்கபூர்வமான ராஜதந்திரத நடவடிக்கைளில் ஈடுபட அனைத்து தரப்பினரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.



அமைதியான அணு ஆய்வு மற்றும் அதன் பயன்பாட்டிற்கான நாடுகளின் உரிமையைப் பாதுகாப்பதே எங்கள் நம்பிக்கையும் பிரார்த்தனையும் ஆகும். இது, பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஓர் அமைதி நிலவும் மத்திய கிழக்கை மிளிரச் செய்யும்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button