கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டதால் உயிரிழந்த சுமார் 90 மாலுமிகளின் உடல்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புமாறு இலங்கையிடம் ஈரான் வேண்டுகோள்

இலங்கைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டார்பிடோ தாக்குதலில் ஈரானிய கடற்படைக் கப்பல் மூழ்கியபோது உயிரிழந்த தனது மாலுமிகளின் உடல்களைத் தாயகம் திருப்புவதற்கு விரும்புவதாக ஈரான் இலங்கைக்கு அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் மீட்கப்பட்ட சுமார் 90 உடல்கள் காலியில் உள்ள கராபிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.
உடல்கள் ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று ஈரானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும், அவற்றைத் தாயகம் திருப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அந்த ஏற்பாடுகள் பூர்த்தியாகும் வரை, உடல்கள் வைத்தியசாலையின் குளிரூட்டப்பட்ட வசதிகளில் வைக்கப்படும்.
நேற்றிரவு வரை கராபிட்டிய வைத்தியசாலைக்கு சுமார் 90 உடல்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட விஜேமுனி, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கை தரப்படுத்தப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும், அதில் பிரேதப் பரிசோதனைகளை நடத்துவது மற்றும் உடல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அந்தந்த நாடுகளுடன் கலந்தாலோசிப்பது ஆகியவையும் அடங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்தியாவில் கடற்படைப் பயிற்சிகளை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டார்பிடோவினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஈரானிய கடற்படையின் ‘IRIS Dena’ போர்க்கப்பலின் பணியாளர்களில் இந்த மாலுமிகளும் அடங்குவர்.



