இந்தியப் பெருங்கடல் ஒரு அமைதிப் பிராந்தியமாக இருக்க வேண்டும் – அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் ; சஜித்

இந்தியப் பெருங்கடல் ஒரு அமைதிப் பிராந்தியமாக இருக்க வேண்டும் என்றும், அது தற்போது நடந்து வரும் எந்தவொரு இராணுவ மோதல்களின் ஒரு பகுதியாக மாறக்கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
NDTV-க்கு அளித்த பேட்டியின் போது, இந்தியப் பெருங்கடல் மீண்டும் மீண்டும் அமைதி வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்ந்து பகைமைகளற்ற ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் பிரேமதாச தெரிவித்தார்.
இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் ஈரானியப் போர்க்கப்பலான IRIS Dena மூழ்கடிக்கப்பட்டதாலும், திருகோணமலையில் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ள மற்றுமொரு ஈரானியக் கப்பலான IRIS Busheher-இன் வருகையாலும் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அவரது இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
பாதிக்கப்பட்ட IRIS Dena கப்பலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு உதவி வழங்கவுள்ளதாகவும், சர்வதேச நெறிமுறைகள் மற்றும் மனிதாபிமான கடமைகளின்படி இந்தச் சூழல் கையாளப்படும் என்றும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் “சமச்சீரற்ற போர்முறை” (asymmetric warfare) என்று அவர் விவரித்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு அழைப்பு விடுத்த பிரேமதாச, விரிவடைந்து வரும் மோதலானது இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்தார்.
இலங்கை இன்னும் 2022-ஆம் ஆண்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், விரிவடைந்து வரும் மத்திய கிழக்கு மோதல் ஏற்கனவே நாட்டையும் அதன் மக்களையும் பாதித்து வருவதாக எச்சரித்தார்.
மேலும், பிராந்தியம் முழுவதும் மோதல் பரவுவதைத் தடுக்க அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.



