ஈரானுக்கு உதவ ஓமன் கடற்பரப்பிற்கு வந்துள்ள சீனாவின் அதி சக்திவாய்ந்த உளவு கப்பல்…

வலைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள பின்னணியில், ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீனாவின் ‘Liaowang 1’ உளவு கப்பல், உலக அரசியல் மற்றும் இராணுவ சக்திகளின் பலத்த கவனத்தை ஈர்த்துள்ளது.
பார்ப்பதற்கு சாதாரண கப்பல் போலத் தோன்றினாலும், இதில் பொருத்தப்பட்டுள்ள பிரம்மாண்டமான ரேடார் அமைப்புகள் மூலம் இப்பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து இராணுவ நடவடிக்கைகளின் சிக்னல்களையும் கண்காணிக்கும் திறன் இதற்கு உண்டு.
இந்தக் கப்பலானது அமெரிக்காவின் போர் கப்பல் குழுக்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள், போர் விமானங்கள் மற்றும் ரேடார் அமைப்புகளிலிருந்து வெளியேறும் மின்காந்த அலைகளைக் கண்டறிகிறது.
இந்தத் தரவுகள் மூலம் முழுப் போர்க்களத்தையும் ஒரே மின்னணு வரைபடமாக (Electronic Map) அவதானிக்கும் ஆற்றலை சீனா பெற்றுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் ஈரான் நடத்திய தாக்குதல்களின் துல்லியம் குறித்து இராணுவ நிபுணர்கள் வியப்படைந்துள்ளனர். குறிப்பாக, ஜோர்டானில் உள்ள 300 மில்லியன் டாலர் பெறுமதியான THAAD ரேடார் அமைப்பு மற்றும் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலுள்ள இலக்குகள் மிகவும் துல்லியமாகத் தாக்கப்பட்டன. இதற்கு சீன மற்றும் ரஷ்ய உளவுத் தகவல்கள் உதவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அமெரிக்க இராணுவத் திட்டமிடுபவர்கள் இந்தக் கப்பலின் செயல்பாடுகளை அறிந்திருந்தாலும், இது சர்வதேச கடற்பரப்பில் சட்டப்பூர்வமாக இருப்பதால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
இவ்வாறானதொரு கப்பலைத் தாக்குவதோ அல்லது கைப்பற்றுவதோ சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நேரடிப் போருக்கு வழிவகுக்கும் என்பதால் அமெரிக்கா கடும் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளது.
நவீன போர்க்காலத்தில் ஆயுத பலத்தை விட தகவல் பலமே முக்கியமானது என்பதால், ‘Liaowang 1’ கப்பல் அமைதியாக இருந்து முன்னெடுக்கும் இந்த நடவடிக்கை வலைகுடா போரில் ஒரு தீர்மானமிக்க காரணியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



