இலங்கை கடற்பரப்பில் அமெரிக்காவால் கொல்லப்பட்ட 84 ஈரானிய மாலுமிகளின் உடல்கள் இன்று விசேட விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பி வைக்கபடுகிறது

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் அமெரிக்காவினால் தாக்கப்பட்ட IRIS DENA கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரான் நாட்டிற்கு இன்று (13) அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
உடல்களை ஏற்றிய விசேட விமானமொன்று இன்று (13) மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஈரான் நோக்கிப் புறப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை மீண்டும் தாய்நாட்டிற்கு கொண்டு செல்லும் பணிகள் இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த மாத தொடக்கத்தில், காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் சுமார் 180 பேருடன் பயணித்த ஈரான் கடற்படைக் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானது.
மீட்கப்பட்ட ஈரான் மாலுமிகளில் 35 பேர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், 84 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோ (torpedo) ஏவுகணை மூலம் சர்வதேச கடற்பரப்பில் ஈரானியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட்டர் ஹெக்செத் உறுதிப்படுத்தினார்.



