சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன – தேவையான எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும், மேலும் கப்பல்கள் வர உள்ளதாகவும் லிட்ரோ அறிவித்தது

திரவ பெற்றோலிய எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) நாட்டை வந்தடைந்தன.
உஸ்வெட்டகெயால, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்த கப்பல்களில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல் வந்தடைவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு தேவையான எரிவாயு கையிருப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரையில் உள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.
மேலதிக எரிவாயு இருப்புக்கள் மாலைத்தீவிலுள்ள சேமிப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
எரிவாயுவை ஏற்றிய கப்பல் அமெரிக்காவிலிருந்து விரைவில் மாலைத்தீவை வந்தடையும்.
மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவைக் கொண்ட மற்றொரு கப்பல் ஏப்ரல் 20ஆம் திகதி வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், எந்தவித இடையூறுமின்றி விநியோகத்தைத் தொடர்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சன்ன குணவர்தன பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்



