“கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிச் சென்றார்… இப்போதைய ஜனாதிபதிக்கும் கண்டுபிடிக்க முடியாதவாறு தப்பியோட வேண்டிய நிலை ஏற்படும்.. இறுதியில் ரணில் விக்ரமசிங்க நாட்டுக்காக விட்டுச்சென்ற 6 பில்லியன் டாலர்கள் மட்டுமே எஞ்சும்

எதிர்காலத்தில் நாடு எதிர்கொள்ள வேண்டிய உண்மையான நெருக்கடிகளைப் பற்றி கூறாமல், ஜனாதிபதி அழகான கதைகளைக் கூறுவதால் எந்தப் பயனும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அரசியல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:
“கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிச் சென்றார். இவருக்கும் கண்டுபிடிக்க முடியாதவாறு தப்பியோட வேண்டிய நிலை ஏற்படும். இதை நாங்கள் தான் கூறினோம் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இறுதியில் எஞ்சியது ‘கஜு கான சீயா’ (முந்திரி சாப்பிடும் தாத்தா) நாட்டிற்காக விட்டுச் சென்ற சுமார் ஆறு பில்லியன் டொலர்கள் மாத்திரமே. நாட்டுக்கு ஏற்பட்டுள்ள விதி குறித்து ஜனாதிபதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.
அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும், வந்த பின்னரும் கூறிய கதைகளைப் பார்க்கும்போது விதியின் வேடிக்கை நன்றாகப் புரிகிறது. பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் அதற்குத் தான் பொறுப்பல்ல என்றும், உலகப் போரே காரணம் என்றும் ஜனாதிபதி தொடர்ந்து கூறி வருகிறார். அக்காலத்தில் இலங்கையில் அடிமைகள் என்ற ஒரு கூட்டம் இருந்தது. இப்போது ஒரு முட்டைக் கூட்டமே இருக்கிறது.
எதையும் நம்புகின்ற, கூர்மையான புத்தி இல்லாத மக்கள் வாழும் நாடு ஒருபோதும் முன்னேறாது.
இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன் அரசாங்கத்திற்கு இல்லை என்பதை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தோம். இந்த அரசாங்கம் திருடவில்லையாம். அவர்கள் வேலை செய்யாததால்தான் திருடவில்லை. இவர்கள் ஏதேனும் ஒன்றைச் செய்யத் தொடங்கினால், செய்த முதல் விடயத்திலேயே சொதப்பி விடுகிறார்கள்.
அரசாங்கங்கள் சவால்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். இந்த அரசாங்கத்திற்கு முதலில் வந்த சவால் ‘தித்வா’ புயலாகும். ஒரு தகரம் போனாலும் பத்து இலட்சம் தருவோம் என்று ஆரம்பிக்கப்பட்ட அந்த கதை இன்று எவ்வளவு பெரிய வேடிக்கையாக மாறியுள்ளது?
முதலில் கப்பல்கள் வரிசையில் இருப்பதாகக் கூறினார்கள். இப்போது இன்னார் நாளில் கப்பல் வரும் என்று கதைகளைக் கூறுகிறார்கள். எரிவாயு இறக்குமதி செய்வதில் சொதப்புகிறார்கள். QR குறியீடு விடயத்தில் சொதப்புகிறார்கள். போதியளவு எரிபொருள் இருந்தால், QR குறியீட்டின் மூலம் வழங்கப்படுகிறது என்றால், வரிசைகள் எப்படி உருவாகின்றன?” என மேலும் கேள்வி எழுப்பினார்



