News

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளின் கொள்ளளவை அதிகரிப்பதில் இலங்கை சரியான பாதையில பயணிக்கிறது ;

இலங்கையின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை பலப்படுத்தும் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்கான சரியான பாதையில் இலங்கை பயணித்துக்கொண்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய டாக்டர் ஜயதிஸ்ஸ,

அரசாங்கத்தின் எரிசக்தி அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் கீழ் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளின் கொள்ளளவை விரிவுபடுத்துவது ஒரு முக்கிய நீண்டகால தீர்வாக உள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) ஏற்கனவே பல தாங்கிகள் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்திற்காக 32 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலையை ஒரு மூலோபாய எரிசக்தி மையமாக மாற்றுவதற்காக இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்ட முக்கிய முத்தரப்பு ஒப்பந்தத்துடன் இணைந்ததாக இந்த அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகிறது.

அமைச்சரவைப் பேச்சாளரின் கூற்றுப்படி, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MoU) இலங்கைக்கு மலிவு விலையில் எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதையும், எதிர்கால எரிசக்தி திட்டங்கள் மூலம் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுவதையும் நோக்கமாகக் கொண்ட எரிசக்தி உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பை கோடிட்டுக் காட்டுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது கட்டப்பட்டதும், தற்போது லங்கா ஐஓசி (Lanka IOC) நிர்வாகத்தின் கீழ் பகுதியளவு மட்டுமே இயங்கி வருவதுமான திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை நவீனமயமாக்குவது இந்த கூட்டாண்மையின் ஒரு முக்கிய அங்கமாகும்.

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான குழாய் வழித்தடத்தை (Pipeline) அமைப்பதற்கான திட்டங்களும் இந்தத் திட்டத்தில் உள்ளடங்கியுள்ளன. இது பிராந்திய எரிசக்தி இணைப்பை மேம்படுத்துவதோடு, விநியோகச் செலவைக் கணிசமாகக் குறைக்கும் என்றும் டாக்டர் ஜயதிஸ்ஸ விளக்கினார்.

Recent Articles

Back to top button