எரிபொருள் விலை கணிசமாக உயர்கிறது: புதிய கப்பலில் வந்த எண்ணெயை பழைய விலைக்கு வழங்க முடியாது என நிறுவனங்கள் தெரிவிப்பு

உலகச் சந்தையில் நிலவும் தளம்பல் நிலைமை காரணமாக, இந்த மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் உள்நாட்டு எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என இலங்கை கனிப்பொயுள் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரித்துள்ளமை இதற்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்கிய விடயங்கள்:
• விலை அதிகரிப்பு: கடந்த முறையை விட இம்முறை விலை அதிகரிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
• காரணங்கள்: உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்புடன், காப்புறுதிக் கட்டணங்கள் மற்றும் கப்பல் கட்டணங்கள் உள்ளிட்ட மேலதிக செலவுகளும் அதிகரித்துள்ளன.
• எதிர்பார்க்கப்படும் சதவீதம்: மேலதிக செலவுகளைக் கருத்திற்கொண்டு, எரிபொருள் விலையை 5% முதல் 10% வரை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
• உத்தியோகபூர்வ கருத்து: எரிபொருள் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள போதிலும், விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதியை தற்போதைக்குக் குறிப்பிட முடியாது என கனிப்பொயுள் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தாமதமாகும் விநியோகம்
இலங்கை கனிப்பொயுள் கூட்டுத்தாபனத்தினால் ஓர்டர் செய்யப்பட்ட 90,000 மெட்ரிக் தொன் எரிபொருளும், தனியார் நிறுவனமொன்றினால் ஓர்டர் செய்யப்பட்ட 35,000 மெட்ரிக் தொன் எரிபொருளும் நாட்டுக்குக் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அத்தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு மேலதிக செலவுகளை ஏற்க வேண்டியுள்ளது.
இருப்பினும், கடந்த 17ஆம் திகதி தனியார் நிறுவனமொன்றினால் கொண்டுவரப்பட்ட சுமார் 40,000 மெட்ரிக் தொன் எரிபொருளைத் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. தற்போதைய செலவு அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு, குறித்த எரிபொருள் கையிருப்பின் விலையையும் அதிகரிக்குமாறு அந்த நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறியக்கிடைக்கிறது.



