எரிபொருள் விநியோகம் தொடர்பில் கூட்டுத்தாபனம் வழங்கிய வாக்குறுதி பொய்யானது: நிரப்பு நிலைய உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

இன்று (21) சனிக்கிழமையும் முனையங்களில் இருந்து எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்த போதிலும், தற்போது எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சற்று முன்னர் தெரிவித்துள்ளனர்.
எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் முனையங்களுக்கு இன்று காலை போசர் வண்டிகள் சென்றிருந்த போதிலும், எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலைமை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இருப்பினும், வார இறுதி நாட்களிலும் எரிபொருள் கையிருப்புகள் விநியோகிக்கப்படும் என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் நேற்று மாலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



