இலங்கையின் கடலோரப் பகுதிகளில் மூன்று டிரில்லியன் கன அடி எரிவாயு மற்றும் பல பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இருப்பது தொடர்பில் மதிப்பிடப்பட்டது.

இலங்கையின் கடலோரப் பகுதிகளில் மூன்று டிரில்லியன் கன அடி வரை இயற்கை எரிவாயு இருப்புக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக ‘த சண்டே மோர்னிங்’ (The Sunday Morning) இதழில் வெளியான நேர்காணல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாலிய விக்கிரமசூரியவை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள அந்த அறிக்கையில், நாட்டின் பிராந்திய கடல் எல்லை மற்றும் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குட்பட்ட கடற்பரப்பிற்கு அடியில் “பல பில்லியன் பேரல்” கச்சா எண்ணெய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட வடிநில மாதிரிகள் மற்றும் நில அதிர்வு தரவுகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடுகள் அமைந்துள்ளன. இவை இலங்கையின் கடல்சார் வளங்களின் ஆற்றல் குறித்த புரிதலை மேம்படுத்தியுள்ளன.
இருப்பினும், முதலீட்டாளர்களை ஈர்ப்பது மற்றும் அகழ்வாராய்ச்சி உரிமங்களை வழங்குவது போன்ற செயல்முறைகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால், உடனடி எதிர்காலத்தில் வணிக ரீதியான அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வாய்ப்பில்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கடல்சார் அகழ்வாராய்ச்சியில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பவும், 2021 ஆம் ஆண்டின் பெற்றோலிய வளங்கள் சட்டம் உட்பட ஒரு புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை இலங்கை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
“Explore Sri Lanka” திட்டத்தின் கீழ், அதிகாரிகள் பாரம்பரிய ஏல முறையிலிருந்து விலகி திறந்த உரிம முறைக்கு மாறியுள்ளனர். சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் விரிவான பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக கடல்சார் பகுதிகள் சிறிய தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, பல உலகளாவிய நிறுவனங்கள் இலங்கையின் கடல்சார் வளங்களை ஆய்வு செய்ய ஏற்கனவே ஆர்வம் காட்டியுள்ளன. இது பல தசாப்தங்களாக மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தைக் கண்டு வந்த ஒரு துறையில் மீண்டும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.



