
கொழும்பு 14 ஐச் சேர்ந்த பெண் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்குச் சொந்தமான 300 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை இலங்கை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களையும் செல்வத்தையும் சேர்த்துள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், நிலம், நான்கு கடை அறைகள், கொழும்பு 14 மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளில் உள்ள சொகுசு வீடுகள் மற்றும் 5.9 மில்லியன் ரூபா பணத்தைக் கொண்ட ஆறு வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய நீர்கொழும்பு மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.
மேலதிக விசாரணைகளின் போது வெல்லம்பிட்டியவில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான மற்றொரு சொகுசு வீடு கண்டறியப்பட்டது. அந்தச் சொத்தும் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2026 மார்ச் 20 முதல் ஏழு நாட்களுக்கு முடக்கப்பட்டது.
சந்தேக நபரின் சொத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.



