
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கிடையே தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், இரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ உரையாடல் இதுவெனக் கருதப்படுகிறது.
இது தொடர்பான தகவல்களைப் பிரதமர் மோடியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் செர்ஜியோ கோரும் தமது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த கலந்துரையாடலின் போது, பிராந்தியத்தில் போர்ச் சூழல் தணிந்து, அமைதி விரைவில் திரும்ப இந்தியா தனது ஆதரவை வழங்கும் என மோடி குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உலக நாடுகளின் எரிசக்தித் தேவைக்கு இந்த நீர்வழிப் பாதை மிக முக்கியமானது.
இது பாதுகாப்பாகவும், தடையின்றியும் இயங்குவது உலக நாடுகளின் தேவையாகும் என மோடி குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



