News

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் காலத்தில் காணாமல் போன தம்பதியினரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் காலத்தில் காணாமல் போன தம்பதியினரின் உடல்கள், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளம்பிட்டிய, கம்பிக்கொடுவ வத்தை பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து செவ்வாய்க்கிழமை (24) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கைகளின்படி, 62 வயதான சுனில் குமாரசிங்க மற்றும் கமண்டா சில்வா என அடையாளம் காணப்பட்ட இவர்கள், 2020 ஆம் ஆண்டில் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆரம்பகட்ட விசாரணைகளில் எந்தத் தடயமும் கிடைக்காத நிலையில், குடும்பத்தினர் ஜனாதிபதி செயலகத்திடம் மேன்முறையீடு செய்தனர், அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லோகுஹெட்டியின் மேற்பார்வையில், விசாரணையாளர்கள் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் தம்பதியினரிடம் விசாரணை நடத்தினர். தலைமை ஆய்வாளர் எஸ்.பி. விஜேதுங்க தலைமையிலான விசாரணையில், தனிப்பட்ட தகராறு காரணமாக காணாமல் போன தம்பதியினர் கொலை செய்யப்பட்டு, உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டு, அருகில் உள்ள கால்வாயில் புதைக்கப்பட்டது தெரியவந்தது.

சந்தேக நபரான தம்பதியினருடன் மற்றுமொரு கூட்டாளியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர், இதில் இருவர் போதைப்பொருளுக்கு பலத்த அடிமையானவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு, பெண்ணின் தங்கச் சங்கிலி திருடப்பட்டு, உடல்கள் துண்டுகளாக்கப்பட்டு மறைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் உடல் பாகங்கள் மேலே மிதந்த போது, பிரதான சந்தேக நபர் அவற்றை மீண்டும் புதைத்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர் அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர், அங்கு மீட்கப்பட்ட எச்சங்கள் குறித்து முறைப்படி அறிக்கை அளிக்கப்பட்டது. இக்கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்வதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button