இலங்கைத் தேயிலைக்கான சர்வதேச நாடுகளின் கேள்வி கணிசமாக அதிகரித்தது – வளைகுடா யுத்தத்தை அடுத்து தேயிலை சபை எடுத்துள்ள துரித மாற்று நடவடிக்கை வெற்றி

இலங்கைத் தேயிலைக்கான கேள்வி சர்வதேச சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கைத் தேயிலை சபையின் தலைவர் ராஜ் ஒபேசேகர தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வார ஏலத்தில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விற்பனை விலை 1,153 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. தற்போது ஏலத்தில் விற்பனையாகாத தேயிலையின் அளவு 8% முதல் 10% வரை மாத்திரமே காணப்படுகின்றது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை மற்றும் பிராந்திய மோதல்கள் காரணமாக குவைத், சவூதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.
எனினும், தேயிலை சபை எடுத்துள்ள துரித நடவடிக்கையினால் துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்கு மாற்று கடல் வழித்தடங்கள் ஊடாக ஏற்றுமதி வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேயிலை விவசாயிகளுக்குத் தேவையான மூன்று மாத காலத்திற்கான உரத்தை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் உற்பத்தி நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுக்க விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.



