இலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் வீரர் ஒருவரின் 9 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தங்கச் சங்கிலியை எடுத்து அடகு வைத்து பணம் எடுத்த நடிகை கைது

புதிய தலைமுறை நடிகை ஒருவர் தங்கச் சங்கிலி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் இன்று (30) கைது செய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் வீரர் ஒருவரின் 9 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தங்கச் சங்கிலியை, அதன் உரிமையாளரின் அனுமதியின்றி பத்தரமுல்லையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்து 6 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய, இன்று தலங்கம பொலிஸ் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த தங்கச் சங்கிலி அடகு வைக்கப்பட்டிருந்தாலும், அதனை மீட்டு மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக்க முடியும் என சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
இதனடிப்படையில், சந்தேகநபரை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க பதில் நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், குறித்த தங்கச் சங்கிலியை தலங்கம பொலிஸார் பொறுப்பேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி அழைக்கப்பட உள்ளது.



