ஈஸ்டர் தாக்குதல் குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க நிபுணர் குழு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்காக முறையான பொறிமுறையொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும், அன்றைய தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு 2021 மே 17 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும், குறித்த பரிந்துரைகளின் நடைமுறைச் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கான முறையான மற்றும் நிலையான பொறிமுறை இதுவரை நிறுவப்படாததால், அவற்றின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்கு தற்போது பயனுள்ள பொறிமுறை எதுவும் இல்லை.
எனவே, பொது மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, மேற்கூறிய பரிந்துரைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதற்காக, விரிவான ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பைக் கொண்ட ஒரு பொறிமுறையை நிறுவ வேண்டிய அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசிய பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள், நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்காக, பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



