திறைசேரி மீது ஹேக்கர் தாக்குதல் நடத்தப்படவில்லை.. நிதி விதிமுறைகளின் 13 படிநிலைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.. செயலாளர் அனுமதி வழங்கியுள்ளமை அம்பலம்..

திறைசேரியில் நிதி அமைச்சின் ஊடாக இடம்பெற்றுள்ள 2.5 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி முறைகேடானது, வெறும் கணினி முறைமைக்குள் அத்துமீறி நுழைந்த (Hacking) ஒரு செயல் அல்ல எனவும், அரசாங்கத்தின் நிதி விதிமுறைகளின்படி (Financial Regulations) பூர்த்தி செய்யப்பட வேண்டிய அனைத்து 13 படிகளையும் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட ஒரு கொடுக்கல் வாங்கல் எனவும் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், இந்த நிதி மோசடி தொடர்பில் கீழ்மட்ட அதிகாரிகள் நால்வரைப் பலிக்கடாவாக்கிவிட்டு, உயர் அதிகாரிகள் இதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார்.
தென்னக்கோன் அவர்களின் கருத்துப்படி, இவ்வாறான வெளிநாட்டு கடன் தவணை (Term Loan) செலுத்துகையின் போது, அமைச்சின் செயலாளர் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை 13 படிநிலைகளைக் கடக்க வேண்டும்.
“இது ஒரு தனி நபர் முறைமைக்குள் நுழைந்து செய்யும் ஹேக்கிங் (Hacking) அல்ல. அமைச்சின் செயலாளரின் அனுமதி பெற்று, பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள் ஊடாக எழுதுவினைஞர் மட்டம் வரையிலான அதிகாரிகள் 13 படிநிலைகளைப் பூர்த்தி செய்தே இந்தப் பணம் செலுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நிதி அமைச்சின் தற்போதைய செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும அவர்களுக்கு இலங்கையின் அரச சேவை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து முறையான அனுபவம் இல்லாமையே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணம் என தென்னக்கோன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தனியார் துறையில் பணியாற்றிவிட்டு இலங்கையின் செயலாளர் பதவிக்கு வந்த அவரின் முதற்கட்ட கையொப்பம் இன்றி எந்தவொரு கடன் தவணையையும் செலுத்த முடியாது எனவும், இந்த சர்ச்சைக்குரிய கொடுப்பனவு அவர் இதற்கு முன்னர் பணியாற்றிய ஆஸ்திரேலிய தனியார் நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு கடன் தொகை என்பதும் இதன்போது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது உதவிப் பணிப்பாளர் மற்றும் கணக்காளர் உள்ளிட்ட நான்கு கீழ்மட்ட அதிகாரிகள் மாத்திரமே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
“நிதி விதிமுறை 135-இன் கீழ் இதற்கான பொறுப்பு உயர் அதிகாரிகளுக்கே உரியது. செயலாளரின் அனுமதியின்றி இந்தப் பணத்தைச் செலுத்த எவ்வித வழியும் இல்லை. ஆனால் இன்று நடப்பது என்னவென்றால், இந்தப் பாரிய குற்றத்திற்காக கீழ்மட்ட அதிகாரிகளைப் பலிக்கடாவாக்கிவிட்டு உயர் மட்டத்தினர் விடுதலையாவதே ஆகும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் திறைசேரி இவ்வாறு கொள்ளையடிக்கப்படுவது பாரதூரமான நிலைமை எனவும், உடனடியாகச் செயல்பட்டு அரச சேவை குறித்து சிறந்த புரிதல் உள்ள ஒரு அதிகாரியை நிதிச் செயலாளராக நியமிக்க வேண்டும் எனவும் தென்னக்கோன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால் திறைசேரியின் வீழ்ச்சியைத் தடுக்க முடியாது என அவர் எச்சரித்துள்ளார்.



