சுமார் 1.1 பில்லியன் ரூபா பெறுமதியான ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கும் தடுப்பு காவல் – குற்றத்தை செய்ய இவர்களை வழிநடத்திய மற்றுமொரு பிக்குவும் கம்பஹா பகுதியில் வைத்து கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கிலோகிராமுக்கும் அதிக எடையுள்ள ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குமாரையும் எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட பிக்குகள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பிக்குகள் குழுவிற்குத் தலைமை தாங்கி இந்த குற்றத்தை வழிநடத்தியதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபரான மற்றுமொரு பிக்கு, கம்பஹா – மீகஹமுல்ல பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த 22 பேரிடமும் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, அவர்களின் பயணப் பைகளில் பிரத்தியேகமாக மாற்றியமைக்கப்பட்ட 110 கிலோகிராமுக்கும் அதிகமான “குஷ்” மற்றும் “ஹேஷ்” போதைப்பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ஒவ்வொரு சந்தேக நபரும் தங்களது பயணப் பைகளில் 5 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களை எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு விளம்பரதாரர் வழங்கிய விமான பயணச்சீட்டுகளை பயன்படுத்தி, சந்தேக நபர்கள் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி இலங்கையிலிருந்து தாய்லாந்துக்குப் புறப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அங்கு இருந்தபோது, அவர்கள் சாதாரண உடைகளை அணிந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைகளின் படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகள் பின்னர் அவர்களது கைபேசிகளிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டன.
இந்த போதைப்பொருள் பறிமுதல், கட்டுநாயக்க வானூர்தி விமான நிலையத்தில் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் தொகை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அத்துடன், பிக்குமாரிடமிருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் பலர் வெவ்வேறு நிறுவனங்களில் உயர்கல்வி பயின்று வருவதாகவும் கூறப்படுகிறது.



