News

மக்களே…  நாட்டை கொள்ளையடிக்கும் இந்த JVP திருடர்களுடன் தொடர்ந்து வாழ்வதா? அல்லது இவர்களைக் கண்ட இடத்தில் விரட்டியடித்து நாட்டைப் பாதுகாப்பதா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என பொதுஜன பெரமுன அறிவிப்பு

அரச திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பில் அதற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோருக்கு நேரடித் தொடர்பு இருக்கின்றதா என்ற பலமான சந்தேகம் எழுந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரச திறைசேரியில் இடம்பெற்ற இந்த நிதி மோசடி சம்பவத்தை ‘ப்ரீ லோயர்’ அமைப்பு கண்டறிந்து முறைப்பாடு செய்ததன் பின்னரே இது வெளிச்சத்திற்கு வந்ததாகவும், அதுவரை அரசாங்கம் இந்தத் திருட்டை மக்களிடமிருந்து மறைக்க முயற்சி செய்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாக நாம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், வரலாற்றில் திருட்டுத்தனமான அரசியலில் ஈடுபட்ட ஒரு குழுவிடம் நாடு ஒப்படைக்கப்பட்டதன் விளைவாக இன்று திறைசேரியே கொள்ளையடிக்கப்பட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த சம்பவம்  ஒரு ‘ஹேக்கர்’ மீது சுமத்த அரசாங்கம் முயன்றாலும், இது மிகவும் சந்தேகத்திற்குரிய கொடுக்கல் வாங்கல் என அவர் சாடினார்.

திறைசேரியின் பணம் திருடப்பட்டு மாதக் கணக்காகியும், நாட்டின் நிதி தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய பாராளுமன்றத்திற்கோ அல்லது பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கோ இது குறித்து முறைப்பாடு செய்யப்படாமை பாரிய குற்றச்சாட்டாகும் என சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஜே.வி.பி.யின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் 1971 மற்றும் 1987-89 காலப்பகுதிகளில் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களை உடைத்து, மக்களின் வீடுகளுக்குள் புகுந்து திருடிய வரலாறே அவர்களுக்கு இருப்பதாகவும், தொழில் புரியாமல் திருடிய பணத்தில் வாழ்ந்தவர்களே இன்று நாட்டை ஆட்சி செய்வதாகவும் அவர் விமர்சித்தார்.

அத்துடன், கடந்த கால நிலக்கரி மோசடியின் பெறுபேறாக மே மாதம் முதலாம் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதோடு, உலகிலேயே அதிக விலைக்கு டீசல் கொள்வனவு செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளதன் பாதிப்புகளையும் மக்கள் எதிர்வரும் வாரங்களில் அனுபவிக்க நேரிடும் என அவர் எச்சரித்தார்.

ஜனாதிபதி அநுரகுமாரவின் கூற்றுப்படி நாடு ஒரு ‘உண்டியல்’ என வர்ணிக்கப்பட்டாலும், இன்று உலகிலேயே பாரிய கொள்ளை இடம்பெற்ற திறைசேரியைக் கொண்ட நாடு என்ற உலக சாதனையை அவர் படைக்க முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

இறுதியில், நாட்டைத் திருடும் திருடர்களுடன் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வாழ்வதா அல்லது இவர்களைக் கண்ட இடத்தில் விரட்டியடித்து நாட்டைப் பாதுகாப்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button