News

பொத்துவில் – அறுகம்பையில் முஸ்லிம் இளைஞர்கள் கைது விவகார சம்பவம் குறித்து தாமும் கவலையில் இருப்பதாக மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தெரிவிப்பு

பொத்துவில் – அறுகம்பை கைது விவகாரம்: ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஆளுநருடன் முக்கிய சந்திப்பு

நூருல் ஹுதா உமர்

பொத்துவில் – அறுகம்பை பிரதேசத்தில் கடந்த 30.04.2026 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்களின் விவகாரம் தொடர்பில் இன்று (05) மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களைச் சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் கலந்து கொண்டு, கைது செய்யப்பட்ட இளைஞர்களின் நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட மௌலவி முஹம்மத் மிப்லால், “இவ்வாறான விவகாரங்களை அரச இயந்திரம் கையாளும் முறை குறித்து ஆளுநர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், பொலிஸார் முறையான விதத்தில் செயல்பட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வழக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக எங்களிடம் தெரிவித்துள்ளார்” என்றார்.

மேலும், சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தனது அறிக்கையை ஆளுநர் பார்வையிட்டதையடுத்து, இவ்விவகாரத்தில் அவர் தனிப்பட்ட கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பிரதியமைச்சர் சுனில் வட்டக்கல ஆகியோருடனும் ஆளுநர் கலந்துரையாடியுள்ளதாகவும், சம்பவம் குறித்து தாமும் கவலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டதாக மிப்லால் தெரிவித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், உழ்ஹிய்யா தொடர்பான விடயங்களும், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button