ஒருவரின் தலையை து*ண்டித்து, சிலையொன்றில் தொங்கவிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் மேலதிக விபரங்கள் வெளியாகின

முக்கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர், சுட்டுக் கொல்லப்பட்டதுடன் அவரது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கொல்லப்பட்டவர் அம்பலாந்தோட்டையைச் சேர்ந்த லக்மால் சதுரங்க (வயது 23) என்பவராவார். இவர் ‘பொடி’ எனும் புனைபெயரால் அழைக்கப்படுபவர். திங்கட்கிழமை (11) இரவு இவர் தனது வீட்டில் இருந்தபோது, துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பின்னர், மன்னா கத்தியால் அவரது தலையை உடலிலிருந்து துண்டித்து எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட தலைப் பகுதி, மாமடல சந்தியில் அமைந்துள்ள ரத்னாவலி தேவியின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலின் போது உயிரிழந்த நபரின் மாமனார் (மனைவியின் தந்தை) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பலி நயந்தாவெல பகுதியில் மூவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படுகின்றது.
‘பொடி’யின் தலையை கொய்து கொலைச் செய்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
தங்காலை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டலில் அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



