“விலங்கு” பாணியில் ஒரு சம்பவம் இலங்கையில் – தாதியாக கடமை புரியும் மனைவியை விசேட வைத்தியருடன் நெருக்கமாக பழகவிட்டு 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைக் கப்பமாகப் பெற்ற சம்பவம் – கணவனும் மனைவியும் பொலிஸாரால் கைது

கண்டியில் உள்ள பிரதான மருத்துவ நிலையமொன்றில் தனியார் சேவையில் ஈடுபட்டுள்ள விசேட வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தி, 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைக் கப்பமாகப் பெற்றனர் என்ற குற்றச்சாட்டில், அதே மருத்துவ நிலையத்தில் பணிபுரிந்த முன்னாள் செவிலியர் ஒருவரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்தெனிய பிராந்திய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினரால் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விசேட வைத்தியருக்கும் 24 வயதுடைய குறித்த செவிலியருக்கும் இடையில் சில காலம் நெருக்கமான உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறான நெருக்கமான தருணங்களின் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி, அந்தச் செவிலியர் தனது கணவருடன் இணைந்து வைத்தியரை அச்சுறுத்தி, அவ்வப்போது இவ்வாறு கப்பம் பெற்று வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த செவிலியர் தனது பணியில் இருந்து விலகி, திருமணம் செய்து கொண்டதன் பின்னர் மெதமஹநுவர பகுதியில் வசித்து வந்துள்ளார். அதன் பின்னரே, அவர் தனது கணவருடன் இணைந்து வைத்தியரை மிரட்டி, பல சந்தர்ப்பங்களில் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைக் கப்பமாகப் பெற்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வைத்தியர், இது குறித்து தெல்தெனிய பிராந்திய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் புகார் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
