கவுன் அணிந்து பாடசாலை சென்ற ஆசிரியைகள் – திருப்பி அனுப்பிய பாடசாலை அதிபர்!
பன்னிப்பிட்டிய , தர்மபால வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக வந்த பெண் ஆசிரியர்கள் குழுவை, பாடசாலையின் அதிபர் பிரதான நுழைவாயில் வழியாக அனுமதிக்க மறுத்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
குறித்த ஆசிரியர்கள் புடவைகளுக்குப் பதிலாக கவுன்களை அணிந்து வந்ததன் காரணமாக அவர்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று வழக்கமான பாடசாலை தினம் என்பதால், பாடசாலைக்குள் பிரவேசிப்பதாயின் சேலை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், மேற்படி ஆசிரியர்கள் கவுன் அணிந்து வந்ததால், பாடசாலைக்குள் அனுமதிக்க அதிபர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் போது அதிபருக்கும் ஆரியர்களுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டதன் காரணமாக ,நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினரை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருப்பினும், இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாததால், விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தை தற்காலிகமாக மூடுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
இருப்பினும், பெண் ஆசிரியர்கள் கவுன் அணிந்து வருவது தவறான விடயம் இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.