குரங்குகள் உட்பட பல்வேறு விலங்குகளால் கடந்த வருடத்தில் 100 மில்லியன் தேங்காய்கள் சேதமடைந்து விட்டதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் தெரிவிப்பு .

விலங்கு கணக்கெடுப்பிற்கான செலவு செய்துள்ள தொகை குறைவானது எனவும்,சேவை வழங்கும் அதிகாரிகள் சுயேச்சையாக முன் வந்துள்ளதாகவும் விவசாய, கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பீ. விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மந்திகள், குரங்குகள், மர அணில்கள், மற்றும் மயில்கள் ஆகிய விலங்குகளால் பயிர்களுக்குச் சேதம் ஏற்படுவதின் காரணமாக இந்த மாதம் 15 ஆம் திகதி விலங்கு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.
விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் தொடர்பில் தகவல் கிடைத்த போதிலும் அதற்காக இதுவரை முறையான மதிப்பீடுகள் மேற்கொள்ளாமையை அடிப்படையாகக் கொண்டு இந்த யோசனை முன்மொழியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த கணக்கெடுப்பு விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கான தீர்வாக அமையாது எனத் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
குரங்குகள் உட்பட பல்வேறு விலங்குகளால் கடந்த வருடத்தில் எதிர்பார்த்த தேங்காய் அறுவடையில் 100 மில்லியன் தேங்காய்கள் சேதமடைந்துள்ளதாகவும், ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
விலங்கு கணக்கெடுப்புடன் மாத்திரம் நின்றுவிடாமல், பயிர் சேதத்தைக் கட்டுப்படுத்த ஒரு முறையை உருவாக்க வேண்டும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் கூறுகின்றனர்.

