புதுவருட கொண்டாட்ட விளையாட்டு போட்டிகளின் போது கிரீஸ் மரத்தில் ஏறிய மாணவன் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு

எல்பிட்டியாவில் புது வருட கொண்டாட்ட விளையாட்டு போட்டிகளின் போது கிரீஸ் மரத்தில் இருந்து விழுந்து மாணவன் பரிதாப மரணம்.
எல்பிட்டிய, பிட்டிகல பகுதியில் உள்ள அமுகொட ஸ்ரீ விஜயராம விகாரைக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று (17.04.2025) நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட பரிதாபகரமான விபத்தில் 16 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
பிட்டிகல பொலிஸாரின் தகவலின்படி, கொண்டாட்டத்திற்காக 40 அடி உயரமுள்ள கிரீஸ் தடவப்பட்ட மரத்தில் ஏறும் போது, மாணவன் மரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளான்.
உடனடியாக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த மாணவன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளுக்காக காத்திருந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக எல்பிட்டியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது. பிட்டிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

