மாலு பணிஸ் உள்ளே வைத்து கஞ்சா பொதிகளை சூட்சுமமாக கடத்தும் சூன் பாண் வண்டி ஓட்டுனர், தவறுதலாக கஞ்சா பணிஸ் ஒன்றை பாடசாலை மாணவனுக்கு விற்றதால் சிக்கிக் கொண்ட சம்பவம் பதிவு

கடவத்தை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் காலை உணவுக்காக பாடசாலைக்கு கொண்டு சென்ற மாலு பணிஸ் உள்ளே இருந்து 2 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கடவத்தை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் காலை உணவுக்காக பாடசாலைக்கு மாலு பணிஸ் ஒன்றை கொண்டு சென்றுள்ளார்.
பாடசாலை மாணவன் அதனை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அதற்குள் இருந்த 2 பொதிகள் கண்டுள்ளார்.
பின்னர் இந்த பாடசாலை மாணவன் அதனுள் இருந்து 2 பொதிகளை ஆசிரியரிடம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஆசிரியை, பாடசாலை மாணவனின் தாயாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடிய போது, மாணவனின் தாயார் பாண் விற்பனை செய்யும் முச்சக்கரவண்டியிலிருந்து மாலு பணிசை வாங்கியதாகவும், மாணவன் பாடசாலைக்கு சென்ற பின்னர் குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி வந்து அதனை மாணவனுக்கு சாப்பிட கொடுக்க வேண்டாம் என்று கூறியதாகவும் ஆசிரியையிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து ஆசிரியை இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் அறிவித்துள்ளார்.
பின்னர் பாடசாலை அதிபர் இது தொடர்பில் பொலிஸாருக்க தவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணையில், குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி பாண் விற்பனை செய்யும் போர்வையில் போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி வேறொரு நபருக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த கஞ்சா பொதிகள் அடங்கிய மாலு பணிசை தவறுதலாக பாடசாலை மாணவனுக்கு கொடுத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கடவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

