எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை சுட்டுப் பிடிக்குமாறு யாழ் மீனவ சங்கங்களின் சம்மேளனம் ஆவேசமாக கடற்படையினரிடம் கோரிக்கை முன்வைத்தது.

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை சுட்டுப் பிடிக்குமாறு யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ஆவேசமாக கடற்படையினரிடம் கோரிக்கை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 60 நாட்களும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி எமது வாழ்வாதாரமான கடற்றொழிலை நாங்கள் சிறப்பாக செய்து வந்தோம். வருமானமும் திருப்திகரமாக இருந்தது.
இந்திய மீனவர்கள் மீண்டும் 16ஆம் திகதி எமது கடற்பரப்புக்குள் வரப்போகின்றார்கள். அவர்களது அட்டூழியங்களால் இதுவரை காலமும் எமது யாழ்ப்பாண மீனவர்கள் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்தும் எமது அரசாங்கத்தாலோ அல்லது இந்திய அரசாங்கத்தாலோ எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை.
கடப்படையானது தோளோடு தோள் நின்று எமக்கு பக்கபலமாக செயல்பட வேண்டும். இந்திய இழுவைமடிப் படகுகளை வராமல் தடுக்க வேண்டும். இரண்டு நாட்டு அரசாங்கமும் இனிமேலாவது கதைத்து எமக்கு ஒரு நல்ல முடிவை கூற வேண்டும்.
அத்துடன் நமது கடற்படைக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுகின்றோம். அதாவது இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் சுட்டாவது அவர்களை பிடியுங்கள். இவ்வாறு பிடித்து அவர்களை சிறையில் அடைத்து விட்டு படக்குகளை கைப்பற்றுங்கள். எமது மீனவர்களையும் குடும்பங்களையும் காப்பாற்றுவதற்கு இதனைத் தவிர வேறு வழி இல்லை என்றார்.

