வெளிநாட்டு பொருட்கள் ஏற்றிய லொறி ஆற்றில் கவிழ்ந்தது – வெளிநாட்டில் இருப்பவர்கள் பெரு நாளுக்காக உறவினர்களுக்கு அனுப்பிய ஏராளமான பொருட்கள் சேதம்

கந்தளாய் யூசுப்
வெளிநாட்டு பொருட்கள் ஏற்றிய லொறி ஆற்றில் கவிழ்ந்தது – பொருட்கள் சேதம் .
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றோர், பெருநாளை முன்னிட்டு தங்களது குடும்பத்தினருக்காக அனுப்பிய பொருட்களை ஏற்றி வந்த லொறி ஒன்று, இன்று (07) அதிகாலை 4.00 மணியளவில் கந்தளாய் சூரியபுற பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுற எல்லைப்பகுதியில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கொழும்பு லக்ஷரி கார்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த லொறி, சம்பவத்தின் போது சாரதிக்கு திடீரென ஏற்பட்ட துக்கம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்தது என ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. லொறியில் சாரதி ஒருவரே மட்டுமே இருந்ததாகவும், அவருக்கு உயிர் ஆபத்தில்லாத வகையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து பயணமான இந்த லொறி, நேற்று மாலை கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளில் பொருட்களை இறக்கிவிட்டு, இன்று சேருநுவர வழியாக கந்தளாய் நோக்கி சென்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில், பல லட்ச ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பொருட்கள் ஆற்றில் மூழ்கி கடுமையாக சேதமடைந்துள்ளன. பெருநாளை முன்னிட்டு பெறவிருந்த குடும்பங்களுக்கு இது பெரும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
சூரியபுற பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







