பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

**அனுராதபுரத்தில் 9 வயது சிறுவன் பசுவின் கயிற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு**
அனுராதபுரம், விஹாரஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன், பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (13) மாலை இடம்பெற்றுள்ளது.
விஹாரபாலுகம வித்யாராஜ வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் இச்சிறுவன், அயலவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட பசுவின் அருகில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, திடீரென பசு கயிற்றை அறுத்து ஓடத் தொடங்கியபோது, சிறுவன் கயிற்றில் சிக்கி, கிராமப் பாதையில் சுமார் 900 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், உடனடியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (14) மாலை சிறுவன் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

