News

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம் என 2 உறுப்பினர்களை வென்றுள்ள திலித்தின் சர்வஜன அதிகாரம் தெரிவிப்பு

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க சர்வஜன அதிகாரம் முடிவு செய்துள்ளது.

கட்சியின் செயற்குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தனது x கணக்கில் பதிவொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் இன்று (16) நடைபெறவுள்ளது.

இதில் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அதற்காக வாக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்படவுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் முழுமையான வெற்றியைப் பெறவில்லை.

தேசிய மக்கள் சக்தி சார்பில் 48 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 29 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 13 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 5 உறுப்பினர்களும் தெரிவாகினர்.

மேலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு எண் 03 சார்பில் 3 உறுப்பினர்களும், சர்வஜன அதிகாரம் சார்பில் 2 உறுப்பினர்களும், ஐக்கிய சமாதான கூட்டணி சார்பில் 2 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு எண் 04 மற்றும் 05 சார்பில் தலா 2 உறுப்பினகளுமாக 04 உறுப்பினர்களும் தெரிவாகினர்.

இதுதவிர, ஐக்கிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தேசிய விடுதலை முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு, சுயேட்சைக் குழு எண் 01 மற்றும் சுயேட்சைக் குழு எண் 02 சார்பில் தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் கொழும்பு மாநாகர சபைக்கு தெரிவாகினர்.

எனினும், 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு ஒரு கட்சிக்கு 59 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகிறது.

இவ்வாறான பின்னணியில், எந்தவொரு அரசியல் கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாததால், கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை அமைப்பது தொடர்பாக அதன் முதல் கூட்டம் இன்று (16) நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்டு, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தரவால் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button