கடைக்கு வந்த சிறுமி மீது 62 வயது கடை உரிமையாளர் பாலியல் துன்புறுத்தல் – பொலிஸில் முறைப்பாடு செய்ய தயங்கிய சிறுமியின் தாயாரை சமூக நலன்விரும்பிகள் தைரியம் கொடுத்து முறைப்பாடு செய்ய வைத்து கடை உரிமையாளரை கைது செய்யவும் வைத்தனர்.

யாழ்ப்பாணம், வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 62 வயது கடை உரிமையாளர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (19) அன்று, துறையூர் கடற்றொழில் சங்கத்திற்கு அருகிலுள்ள கடைக்கு சிறுமி ஜூஸ் வாங்கச் சென்றபோது, கடை உரிமையாளர் சிறுமியை குளிரூட்டிக்குள் ஜூஸ் எடுக்குமாறு கூறி, அவர் ஜூஸ் எடுக்க முற்பட்டபோது பின்புறமாக கட்டியணைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
பதற்றத்துடன் வீடு திரும்பிய சிறுமி, இச்சம்பவத்தை தனது தாயாருக்கு தெரிவித்தார். ஆனால், சமூகம் மற்றும் அயலவருக்கு அஞ்சிய தாயார், முதலில் பொலிஸ் முறைப்பாடு செய்ய தயங்கினார்.
பின்னர், சமூக நலன்விரும்பிகளின் முயற்சியால், கடந்த 23ஆம் திகதி கிராம உத்தியோகத்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 24ஆம் திகதி வேலணை பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அதே நாளில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு, நேற்று (25) பிற்பகல் குறித்த சந்தேக நபரை கைது செய்தனர். அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-யாழ். நிருபர் பிரதீபன்-

