News

நான் அமைச்சரின் செயலாளர் பேசுறேன், ஹெரோயினுடன் கைது செய்த நபரை விடுவிக்கவும் என பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த நபர் கைது

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் செயலாளர் போல் நடித்து மஹரகம பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


ஹெரோயின் வைத்திருந்ததற்காக மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிப்பதற்காக சந்தேக நபர் இவ்வாறு அழைப்பு மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக விசேட விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸார் எடுக்கும் எந்தவொரு கைதுகள் அல்லது நடவடிக்கைகளிலும் அமைச்சரோ அல்லது அமைச்சரின் பணிக்குழாமோ தேவையற்ற அழுத்தங்களையோ அல்லது தேவையற்ற தலையீட்டையோ மேற்கொள்ளாது என குறிப்பிடப்பட்டுள்ளது.


போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுவை எதிர்த்துப் போராடுவதற்கும், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தற்போது விசேட தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சரின் பெயரில் அல்லது அமைச்சின் பணிக்குழாம் என்ற பெயரில் எவரேனும் ஆள்மாறாட்டம் செய்தால் அல்லது பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டாலோ அமைச்சுக்கு அறிவிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button